சென்னையில் கடலில் 25 கிலோ மீட்டர் நீந்தி 6-ம் வகுப்பு மாணவி சாதனை
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் பெருமாள், போலீஸ்காரர். இவரது மனைவி சந்தியா. சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருக்கிறார்.
இவர்களது மகள் சஞ்சனா (வயது 10). 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல் வீராங்கனையான சஞ்சனா சாதனை நிகழ்ச்சிக்காக இன்று வி.ஜி.பி. கடற்கரையில் இருந்து காலை 6.30 மணிக்கு கடலில் நீந்த தொடங்கினார். அவருக்கு பாதுகாப்பாக படகில் நீச்சல் வீரர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
25 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்து 11.30 மணியளவில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் கரை ஏறினார். இந்த தூரத்தை அவர் 4 மணி 48 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளார். அவரது இந்த சாதனை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
நிகழ்ச்சி முடிந்ததும் அவருக்கு விவேகானந்தா கலையரங்கில் நடந்த பாராட்டு விழாவில் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் தலைமை தாங்கினார். ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வா, கடலோர பாதுகாப்பு ஐ.ஜி. சின்னசாமி, விளையாட்டுத்துறை மானேஜர் வீரபத்ரன், டாக்டர். கந்தையா யாதவ், நிதின் போத்ரா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.