விளையாட்டு
பி.வி.சிந்து

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்- பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

Published On 2022-03-10 10:57 GMT   |   Update On 2022-03-10 10:57 GMT
முன்னாள் உலக சாம்பியனான பி.வி.சிந்து, தன்னை விட தரநிலையில் பின்தங்கி உள்ள சீன வீராங்கனை ஜாங் யி மேனை எதிர்கொண்டார்.

ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற சிந்து, இரண்டாம் சுற்று ஆட்டத்தில் தன்னை விட தரநிலையில் பின்தங்கி உள்ள சீன வீராங்கனை ஜாங் யி மேனை எதிர்கொண்டார்.

முதல் செட் ஆட்டத்தில் இருவரும் 5-5 என சமநிலையில் இருந்தபோது பிரேக் செய்த ஜாங், அதன்பின்னர் தொடர்ந்து 6 புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்றார். சிந்துவால் அதை முறியடிக்க முடியவில்லை. இறுதியில் அந்த செட்டை 14-21 என இழந்தார். ஆனால் அடுத்த செட்டை கடுமையாக போராடி 21-15 என கைப்பற்றினார் சிந்து. ஆனால், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் மீண்டும் சிந்துவுக்கு கடும் சவால் அளித்த ஜாங் அந்த செட்டை எளிதாக கைப்பற்றினார்.

இதனால் 14-21 21-15 14-21 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்த சிந்து, போட்டியில் இருந்து வெளியேறினார்.  அடுத்த வாரம் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் பி.வி.சிந்துவுக்கு இந்த தொடர் ஏமாற்றமான தொடக்கமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News