விளையாட்டு
புரோ கபடி லீக் இறுதி போட்டி: டெல்லி-பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை
புரோ கபடி லீக் தொடரில் இதுவரை பாட்னா அணி 4-வது முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது
பெங்களூரு:
12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அரை இறுதியில் பாட்னா பைரட்ஸ் உ.பி.யோத்தாவையும் , தபாங் டெல்லி, பெங்களூரு புல்சையும் வெளியேற்றி இறுதிப் போட்டியை எட்டின.
இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் டெல்லி-பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
பிரசாந்த் குமார் ராய் தலைமையிலான பாட்னா அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது.
அந்த அணியில் சச்சின் ரைடிலும், சியானி டேக்கிளிலும் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார்கள். அவர்களையே அந்த அணி அதிகமாக சார்ந்திருக்கிறது.
தொடர்ந்து 2-வது முறையாக இறுதி சுற்றுக்குள் வந்துள்ள ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணியில், நம்பிக்கை நட்சத்திரமாக நவீன் குமார் வலம் வருகிறார். இறுதிப்போட்டியிலும் அவர் ஆதிக்கம் செலுத்தினால் டெல்லி அணியின் கோப்பை கனவு நனவாகுவதில் சிக்கல் இருக்காது.
சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இறுதி போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.