விளையாட்டு
சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை நந்தினி பதக்கத்தை உறுதி செய்தார்
70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி ஜெர்மனியின் மெலிசா ஜெமினியையும், 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன், கஜகஸ்தானின் அய்டா அலிகெயேவாவையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.
புதுடெல்லி:
73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 81 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை நந்தினி, கஜகஸ்தானின் வாலெரியா ஆக்ஸ்னோவாவை சந்தித்தார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நந்தினியின் சரமாரியான குத்துகளை சமாளிக்க முடியாமல் வாலெரியா திணறினார். இதையடுத்து 3-வது ரவுண்டில் போட்டியை நிறுத்திய நடுவர் நந்தினி வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனால் அரைஇறுதிக்கு முன்னேறிய நந்தினி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.
அவர் அரைஇறுதியில் தோற்றாலும் வெண்கலப்பதக்கம் கிடைக்கும். 70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி ஜெர்மனியின் மெலிசா ஜெமினியையும், 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன், கஜகஸ்தானின் அய்டா அலிகெயேவாவையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். இந்திய வீராங்கனைகள் மீனா ராணி (60 கிலோ), அஞ்சலி துஷிர் (66 கிலோ), சவீட்டி (75 கிலோ) ஆகியோர் தங்கள் பந்தயங்களில் தோல்வியை தழுவினர்.