விளையாட்டு
ராகுல் டிராவிட் - ரிஷப் பண்ட்

ரி‌ஷப்பண்ட் ஆடிய விதம் குறித்து விவாதிக்கப்படும் - ராகுல் டிராவிட்

Published On 2022-01-07 05:31 GMT   |   Update On 2022-01-07 05:31 GMT
இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கான 2-வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றிபெற சமமான வாய்ப்பு இருந்தது. இதை இந்தியா தவறவிட்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோகன்னஸ்பர்க்:

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்னும், தென் ஆப்பிரிக்கா 229 ரன்னும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடி இந்தியா 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 240 ரன் இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 67.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றிபெற சமமான வாய்ப்பு இருந்தது. இதை இந்தியா தவறவிட்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரி‌ஷப் பண்ட் ஆடியதை குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 163 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்த போது ரி‌ஷப்பண்ட் களம் இறங்கினார். அப்போது அனுமன் விகாரியும் களத்தில் இருந்தார்.

ஆனால் ரி‌ஷப்பண்ட் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ரபாடா வீசிய பந்தை அடித்து ஆட முயற்சித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். 2-வது இன்னிங்சில் அதிக ரன் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தபோது ரி‌ஷப்பண்ட் ஆடிய அந்த ஷாட் தேவையில்லாதது என்று கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரி‌ஷப்பண்ட் அடித்த ஷாட்டுக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்தார்.

இந்த நிலையில் ரி‌ஷப்பண்ட் ஆடிய விதம் குறித்து விவாதிக்கப்படும் என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ரி‌ஷப்பண்ட் நேர்மறையாக விளையாடுகிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் ஒரு குறிப்பிட்ட முறையில் விளையாடுகிறார். அது அவருக்கு கொஞ்சம் வெற்றியை கொடுத்தது. ஆனால் நிச்சயமாக அவருடன் சில உரையாடல்களை செய்ய போகிறோம். அவரது ஷாட் தேர்வு குறித்து விவாதிக்கப் போகிறோம்.

ரி‌ஷப்பண்ட் ஒரு ஆக்ரோ‌ஷமான, நேர்மறையான வீரராக இருக்க வேண்டாம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஆனால் சில சமயங்களில் அதை செய்வதற்கான நேரம் மற்றும் சூழ்நிலையை தேர்ந்தெடுப்பதுதான் ஒரு கேள்வியாக இருக்கும்.அதுபற்றி அவருடன் பேசுவோம். ரி‌ஷப்பண்ட் விளையாட்டின் போக்கை மிக விரைவில் மாற்றக்கூடியவர். இயற்கையாகவே இருக்கும் அதை அவரிடமிருந்து பறித்து அவரை மிகவும் வித்தியாசமானதாக நீங்கள் ஆக்க மாட்டீர்கள். அவர் கற்றுக்கொள்கிறார். அவர் தொடர்ந்து முன்னேறி மேலும் சிறப்பாக வருவார்.

முதல் இன்னிங்சில் நாங்கள் 60 முதல் 70 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். அது போட்டியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். நல்ல தொடக்கத்தை பெற்ற வீரர்கள் சிலர் அதை சதங்களாக மாற்றி இருக்கலாம்.

50 முதல் 60 ரன்கள் வரை நாங்கள் முன்னிலை பெற்றிருந்தால் எங்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. 3-வது மற்றும கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ந் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.
Tags:    

Similar News