செய்திகள்
நியூசிலாந்து வீரர்கள்

கான்பூர் டெஸ்ட் 4-வது நாள்: புஜாரா, ரகானே ஏமாற்றம்- உணவு இடைவேளை வரை இந்தியா 84/5

Published On 2021-11-28 06:36 GMT   |   Update On 2021-11-28 09:29 GMT
புஜாரா, மயங்க் அகர்வால், ரகானே, ஜடேஜா அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி நெருக்கடிக்குள்ளாகி 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 345 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது.

49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மயங்க் அகர்வால் 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கினர். 

புஜாரா 23 ரன்கள் எடுத்த நிலையிலும், மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரகானே 4 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் இந்தியா 51 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.



6-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

இந்தியா 4-வது நாள் மதிய உணவு இடைவேளை 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களுடனும், அஸ்வின் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News