செய்திகள்
சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் முரளி விஜய் இடம்பெறாததற்கு இதுதான் காரணமா?
போட்டியில் பங்கேற்பதற்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ கூறியிருந்தது
சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தமிழக அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் இந்த அணியில் நட்சத்திர வீரர் முரளி விஜய் இதுவரை இடம்பெறவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியில் பங்கேற்பதற்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவதுடன், ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனா தடுப்பு வளையத்தில் கட்டாயம் இருக்குமாறு பிசிசிஐ தெரிவித்திருந்தது.
ஆனால், முரளி விஜய் தடுப்பூசி போட தயங்குவதுடன், ஒரு வாரம் தடுப்பு வளையத்தில் இருக்கவும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான அணியில் முரளி விஜய் பெயரை தேர்வுக்குழுவினர் பரிசீலனை செய்யவில்லை என்றும், முரளியால் போட்டியில் பங்கேற்க முடியாது என்றும் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி முரளி விஜய் தரப்பில் இதுகுறித்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் முரளி விஜய். அதன்பிறகு அவர் வேறு எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த வருடம் டிஎன்பிஎல் போட்டியிலிருந்தும் விலகினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிஷன் லீக் போட்டியிலும் முரளி விஜய் விளையாடாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கு அவரை தேர்வு செய்வதில் தமிழகத் தேர்வுக்குழுவினர் ஆர்வம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.