செய்திகள்
கேஎல் ராகுல் - சுனில் கவாஸ்கர்

20 ஓவர் அணியின் துணை கேப்டனாக ராகுலை நியமிக்க வேண்டும் - கவாஸ்கர்

Published On 2021-09-17 05:48 GMT   |   Update On 2021-09-17 05:48 GMT
எதிர்காலத்தில் புதிய கேப்டனாக நியமிக்கப்படக் கூடியவர் என்று இந்திய அணி எதிர்பார்த்தால் அது ராகுலாகதான் இருக்க முடியும் என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகுவதாக அறிவித்ததையடுத்து அடுத்த கேப்டன் யார்? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில் ரோகித் சர்மாவுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் இந்திய அணியின் 20 ஓவர் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார். ரோகித் சர்மா தற்போது துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதையடுத்து அடுத்த துணை கேப்டன் யார் என்று விவாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 20 ஓவர் அணியின் துணை கேப்டனாக லோகேஷ் ராகுலை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

எதிர்காலத்தில் புதிய கேப்டனாக நியமிக்கப்படக் கூடியவர் என்று இந்திய அணி எதிர்பார்த்தால் அது ராகுலாகதான் இருக்க முடியும். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது கூட இங்கிலாந்தில் அவரது பேட்டிங் அருமையாக இருந்தது.

50 ஓவர் போட்டி மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் நன்கு விளையாடி வருகிறார். அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும்.

ஐ.பி.எல். போட்டியில் அவர் கேப்டன் பொறுப்பில் மிகவும் ஈர்க்க கூடிய வகையில் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேப்டன்ஷிப் சுமை அவரது பேட்டிங்கை பாதிக்க ராகுல் அனுமதிக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News