செய்திகள்
டி.என்.பி.எல். முதலாவது தகுதிச்சுற்று: திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
தமிழ்நாடு பிரிமீயர் லீக் முதலாவது தகுதிச்சுற்றில் திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் திருச்சி வாரியர்ஸ் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 9 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், கோவை கிங்ஸ் 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் 2 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருச்சி வாரியர்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம்:-
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கேப்டன்), என்.ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ், ராதாகிருஷ்ணன், சசிதேவ், ஆர்.சதீஷ், சாய் கிஷோர், ஹரிஷ் குமார், சோனு யாதவ், எம்.சித்தார்த், தேவ் ராகுல்
திருச்சி வாரியர்ஸ்: சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், முகமது அத்னன்கான், ஆதித்யா கணேஷ், அந்தோணி தாஸ், ரஹில் ஷா (கேப்டன்), சரவணகுமார், எம்.மதிவாணன், பொய்யாமொழி, சுனில் சாம்.