செய்திகள்
டி20 கிரிக்கெட்: விக்கெட்டில் சதம் அடித்து அசத்திய ஷாகிப் அல் ஹசன்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மலிங்காவிற்கு அடுத்தப்படியாக 100 விக்கெட்டுகள் சாய்த்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஷாகிப் அல் ஹசன்.
வங்காளதேசம்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் சேர்த்தது. பின்னர் 123 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆஸ்திரேலியா 62 ரன்கள் எடுப்பதற்குள் ஆல்-அவுட் ஆனது. 13.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது.
ஆஸ்திரேலியாவை 62 ரன்னில் சுருட்டுவதற்கு ஷாகிப் அல் ஹசனின் சுழற்பந்து வீச்சும் முக்கிய காரணம். அவர் 3.4 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஷாகிப் அல் ஹசன் 102 விக்கெட்டுகள் சாய்த்தார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 107 விக்கெட்டுகள் கைப்பற்றி, 100 விக்கெட்டுகளை கடந்த முதல் வீரர் என்ற பெருமையுடன் முதலிடத்தில் உள்ளார்.
தற்போது ஷாகிப் அல் ஹசன் 102 விக்கெட்டுகளுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். டிம் சவுத்தி 99 விக்கெட்டுகள், ஷாகித் அப்ரிடி 98 விக்கெட்டுகள், ரஷித் கான் 95 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.