செய்திகள்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ பரிசு அறிவிப்பு
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசிஐ ஒரு கோடி ரூபாய் பரிசாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்று வரை முதல் இடத்தில் நீடித்து வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் தட்டி சென்றார்.
அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். அவரது சொந்த ஊரிலும் மக்கள் ஆரவாரமுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
அதன்படி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பி.சி.சி.ஐ. ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. வெள்ளி வென்ற
மீராபாய் சானு மற்றும் ரவிகுமார் தஹியாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.
வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, லோவ்லினா, பிவி சிந்து ஆகியோருக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
ஒலிம்பிக்கில் 41 ஆண்டுக்கு பிறகு வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு 1.25 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.