செய்திகள்
ரஷிய வீரருடன் மல்லுக்கட்டும் ரவிக்குமார்

ஒலிம்பிக் மல்யுத்தம்- வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்

Published On 2021-08-05 11:20 GMT   |   Update On 2021-08-05 11:20 GMT
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் ரவிக்குமார் தாஹியா, நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர்.

அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக்புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று விளையாட உள்ளார். அதேசமயம், 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ரவிக்குமார் தாஹியா.

இந்நிலையில், ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரவிக்குமார் தாஹியா, நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவ் (ரஷியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் ரஷிய வீரரின் உடும்பு பிடியால் புள்ளிகளை இழந்த ரவிக்குமார், பின்னர் சுதாரித்து கடுமையான முயற்சி மேற்கொண்டார். எனினும் ரவிக்குமாரின் பிடியில் சிக்காமல் ரஷிய வீரர் சாமர்த்தியமாக நழுவியதுடன், கூடுதல் புள்ளிகளை பெற்றார்.

இறுதியில் 4-7 என்ற புள்ளிக் கணக்கில் ரவிக்குமார் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

2019ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெண்கலம் வென்றார். அதன்பின்னர் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News