செய்திகள்
ஜடேஜா

ஒரே ஓவரில் 37 ரன்கள்: ஜடேஜா அதிரடியால் அதிக ரன் சாதனையை சமன் செய்தது சிஎஸ்கே

Published On 2021-04-25 12:48 GMT   |   Update On 2021-04-25 12:48 GMT
ஒரே ஓவரில் 37 ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை சிஎஸ்கே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

19 ஓவர் முடிவில் சிஎஸ்கே 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. 20-வது ஓவரை ஹர்சல் பட்டேல் வீசினார். ஜடேஜா இந்த ஓவரை எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகளையும் ஜடேஜா சிக்சருக்கு விளாசினார். 3-வது பந்தை ஹர்சல் பட்டேல் புல்டாஸாக இடுப்பிற்கு மேல் வீசினார். இந்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது.



நோ-பாலுக்கு பதிலாக வீசிய பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் தொடர்ந்து நான்கு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் 2 ரன் எடுத்த ஜடேஜா, கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 36 ரன்கள் விளாசினார். இதன்மூலம் கிறிஸ் கெய்ல் ஓரே ஓவரில் 36 ரன்கள் அடித்ததை சமன் செய்தார்.

கிறிஸ் கெய்ல் அதிரடியால் ஆர்சிபி ஒரே ஓவரில் 37 ரன்கள் எடுத்து, ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. தற்போது இந்த போட்டி மூலம் ஜடேஜா அதிரடியால் சிஎஸ்கே ஒரே ஓவரில் 37 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளது.
Tags:    

Similar News