செய்திகள்
தங்கம் வென்ற சஞ்சீவ் ராஜ்புத்-தேஜஸ்வினி சாவந்த் ஜோடி

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி- இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்

Published On 2021-03-26 10:58 GMT   |   Update On 2021-03-26 10:58 GMT
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று மதிய நிலவரபடி, மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

அவ்வகையில் இன்று ஆண்கள் அணிக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில், இந்திய வீரர்கள் நீரஜ் குமார், ஸ்வப்னில் குசாலே மற்றும் செயின் சிங் ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். இறுதிச் சுற்றில் இந்திய அணி அமெரிக்க அணியை 47-25 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியாவுக்கு 12வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 



முன்னதாக நடந்த கலப்பு இரட்டையருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத், தேஜஸ்வினி சாவந்த் ஜோடி தங்கம் வென்றது. 25 மீட்டர் ரேபிட் பயர் பிரிவில் விஜய்வீர் சித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 

12 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 9 பதக்கங்களுடன் ரஷியா 2வது இடத்திலும், 7 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
Tags:    

Similar News