செய்திகள்
ஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
ஆஸ்திரேலிய மண்ணில் மாஸ் காட்டிய இளம் இந்திய வீரர்களுக்கு புத்தம் புதிய தார் காரை பரிசாக வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இளம் இந்திய அணிக்கு உலகம் முழுக்க பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. டெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில், வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்திய அணியில் அசத்திய ஆறு இளம் வீரர்களுக்கு புத்தம் புதிய மஹிந்திரா தார் காரை பரிசாக வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.
அந்த வகையில் இந்திய அணியை சேர்ந்த நடராஜன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஷூப்மன் கில் மற்றும் நவ்தீப் சைனி உள்ளிட்ட ஆறு இளம் வீரர்களுக்கு மஹிந்திரா தார் கார் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.
காரை வென்ற முகமது சிராஜ் அதில் பயணிக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இவர் கடைசி போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மேலும் தொடரில் அதிகபட்சமாக 13 விக்கெட்களை வீழ்த்தினார்.