செய்திகள்
ரோகித் சர்மா

ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரோகித் சர்மா உள்பட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தல்

Published On 2021-01-02 12:56 GMT   |   Update On 2021-01-02 12:56 GMT
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்துள்ள நிலையில் ரோகித் சர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

புத்தாண்டை முன்னிட்டு மெல்போர்னில் உள்ள உணவு விடுதிக்கு ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப்பந்த், சைனி போன்றோர் சென்றார்கள்.

இந்நிலையில் அதே சமயத்தில் அங்கிருந்த நவால்தீப் சிங் என்கிற இந்திய கிரிக்கெட் ரசிகர், இந்திய வீரர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய உணவு பில்லுக்கான கட்டணத்தைத் தானே செலுத்தியுள்ளார். இதையடுத்து உணவகத்தில் என்ன நடந்தது என்பதை அவர் டுவிட்டரில் விலாவாரியாகத் தெரிவித்தது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

டுவிட்டரில் நவால்தீப் சிங் தெரிவித்ததாவது:

நான் பில் தொகையைக் கட்டியது இந்திய வீரர்களுக்குத் தெரியாது. என்னுடைய சூப்பர் ஸ்டார்களுக்கான சிறிய பங்களிப்பு. நான் தான் பில்லைக் கட்டினேன் எனத் தெரிந்தவுடன், அண்ணா காசு வாங்கிக்கோங்க, இல்லைனா நல்லா இருக்காது என என்னிடம் ரோகித் சர்மா சொன்னார். என்னை அணைத்து நன்றி சொன்னார் ரிஷப் பந்த் என்றார்.

அவர் கட்டிய பில்லின் தொகை - ரூ. 6683. கிரிக்கெட் ரசிகருடைய இந்த டுவீட்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. கொரோனா தடுப்பு விதிமுறைகளை இந்திய வீரர்கள் மீறியுள்ளதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விதிமுறைப்படி, விடுதியின் வெளிப்பகுதியில் மட்டுமே வீரர்கள் சாப்பிட வேண்டும். ஆனால் நவால்தீப் சிங் வெளியிட்ட விடியோவில், இந்திய வீரர்கள் விடுதியின் உள்ளே இருப்பது போலத் தெரிகிறது. மேலும் யாரும் முகக்கவசம் அணியவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் ரோகித் சர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்ட ஐந்து இந்திய வீரர்களும் தனிமைப்படுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ரோகித் சர்மா, ரிஷப் பந்த், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய ஐந்து பேரும் விடுதிக்கு சாப்பிட சென்றது கொரோனா விதிமுறைகளை மீறியதா என்பதை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் பிசிசிஐயும் விசாரணை செய்து வருகின்றன.

அதுவரை, இந்திய, ஆஸ்திரேலிய மருத்துவக் குழுவின் அறிவுரையின்படி, ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். 5 பேரும் இந்திய வீரர்களுடன் இணைந்து பயணம் செய்வதோ பயிற்சி மேற்கொள்ளவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐந்து வீரர்களும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஒன்றாகப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்கள்.
Tags:    

Similar News