செய்திகள்
கேஎல் ராகுலை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும்: ஆஷிஷ் நெஹ்ரா
மயங்க் அகர்வால் உடன் கேஎல் ராகுலை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்திய அணியில் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்குவார். மற்றொரு வீரர் யார்? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. பிரித்வி ஷா, ஷுப்மான் கில் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், ஆஷிஷ் நெஹ்ரா கேஎல் ராகுலைத்தான் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் ‘‘மயங்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக களம் இறங்கும் மற்றொரு வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை நான் பலவீனம் என்று அழைக்க மாட்டேன். ஆனால், உறுதியாக இந்த விசயம் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கும். ஷுப்மான் கில் அல்லது பிரித்வி ஷாவை நீங்கள் சொல்லலாம்.
ஆனால், கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என நான் நம்புகிறேன். தற்போதுள்ள ஃபார்மில் கேஎல் ராகுல் ரன்கள் அடித்தால், இந்த பலவீனம் பலமாக மாறும். அவர்தான் தொடக்க வீரர் என்பதில் நான் உறுதியாக இருப்பேன்’’ என்றார்.