செய்திகள்
ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக துணைக் கேப்டனாக்க வேண்டும்: கில்கிறிஸ்ட்
நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக துணைக் கேப்டனாக்க வேண்டும் என கில்கிறிஸ்ட் வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீஸ் ஸ்மித். இவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தார். 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது ஆஸ்திரேலியா வீரர் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த சம்பவத்தில் ஸ்மித்திற்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஒரு வருடம் தடைவிதித்தது. மேலும், ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்க கூடுதலாக ஒரு வருடம் தடைவிதித்தது. கடந்த மார்ச் மாதத்துடன் அவருக்கு தடைவித்து இரண்டு வருடம் முடிவடைந்துவிட்டது.
இதனால் கேப்டன் பதவியை வழங்க தகுதியாகிவிட்டார். இருந்தாலும் கேப்டன் பதவி கொடுக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் இந்திய தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் அவரை துணைக் கேப்டனாக்க வேண்டும் என முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ஆடம் கில்கிறிஸ்ட் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘ஒருவர் 2-வது வாய்ப்பை பெறக்கூடாது என்பதற்கான எந்த ஒரு காரணத்தையும் நான் பார்க்கவில்லை. கேப்டன் அல்லது துணைக் கேப்டன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு அவர் சரியான வீரர். அந்த இடத்திற்கு மிகவும் வெளிப்படையான நபர். அவர் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை என்னால் பார்க்க முடியவில்லை.
ஆஸ்திரேலியா கிரிக்கெட்டும், தேர்வாளர்களும், ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியை வகிக்க தயாராக இருந்தால், அவரை உடனடியாக துணைக் கேப்டனாக நியமிக்க வேண்டும்’’ என்றார்.