செய்திகள்
தொடர் நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா
தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன் தான் என அவர் கையில் கோப்பையை வழங்கி அழகு பார்த்தார் ஹர்திக் பாண்ட்யா.
சிட்னி:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் பங்கேற்றது. கான்பெர்ராவில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில் நடந்த 2-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது.
இதற்கிடையே, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் வேட் 80 ரன்னும், மேக்ஸ்வெல் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
187-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது. தொடக்க வீரர் கேஎல் ராகுல் ரன் எதுவும் இன்றி வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
கேப்டன் விராட் கோலி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அதிரடியாக ஆடிய விராட் கோலி 85 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.
ஆனாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், 20 ஓவர் தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.