செய்திகள்
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாஜகவில் இணைகிறார்
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரேயாசி சிங், டெல்லியில் இன்று பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனையும், அர்ஜூனா விருது பெற்றவருமான ஷ்ரேயாசி சிங் பாஜகவில் இணைய உள்ளார். பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவரது வருகை பாஜகவிற்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் மாநிலம் கிதாவூரில் 1991ம் ஆண்டு பிறந்தவர் ஷ்ரேயாசி சிங். மறைந்த முன்னாள் மத்திய மந்திரி திக்விஜய் சிங்கின் மகளான இவர், இந்திய துப்பாக்கி சுடும் அணியில் இணைந்து, பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
டபுள் டிராப் பிரிவில் விளையாடிய இவர், 2018ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம், 2014ல் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார்.
இதுதவிர டெல்லி காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி, பிரிஸ்பேனில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். அவருக்கு 2018ம் ஆண்டு மத்திய அரசின் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.