செய்திகள்
கேஎல் ராகுல், மயங்க் அகர்வால்

கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலை தொடக்கத்தில் வீழ்த்துவதுதான் வெற்றிக்கான வழி: ஷேன் பான்ட்

Published On 2020-09-30 13:58 GMT   |   Update On 2020-09-30 13:58 GMT
பஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டுமென்றால் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோரை தொடக்கத்திலேயே வீழ்த்த வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் பவுலிங் கோச்சர் ஷேன் பான்ட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்கம் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்க்கு சிறப்பாக அமையவில்லை. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் கே.கே.ஆர். அணியை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், மூன்றாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் நாளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமானது அல்ல. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இரண்டாவது போட்டியில் ஆர்.சி.பி.க்கு எதிராக கே.எல். ராகுல் சதம் விளாசினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மயங்க் அகர்வால் சதம் அடித்தார். இவர்கள் விக்கெட்டை முன்னதாகவே வீழ்த்தினால் அது வெற்றிக்கான முக்கியமான வழி என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பான்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷேன் பான்ட் கூறுகையில் ‘‘கடந்த சில போட்டிகளில் கே.எல். ராகுல் எங்களுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ளார். அவர் ஒரு தலைசிறந்த வீரர். நாங்கள் இன்று எங்கள் பந்து வீச்சாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது சிறப்பாக விளையாடும் அணிக்கு எதிராக எங்களுடைய திட்டத்தை தீட்டினோம். கே.எல். ராகுல் டைனமிக் வீரர். அவர் மைதானத்தின் எல்லா பக்கத்திற்கும் பந்தை அடிக்க கூடியவர்.



அவர் மிடில் ஆர்டர் ஓவரில் பொதுவாக கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வார் என்பது எங்களுக்கு தெரியும். அப்போது அவருக்கு நெருக்கடி கொடுத்து அவர் உடன் விளையாடும் வீரர்களுக்கும் அந்த நெருக்கடியை உண்டாக்கும் வாய்ப்பை தேடுவோம். நாங்கள் அவரை எப்படி அவுட்டாக வேண்டும் என்பதற்கான திட்டத்தை தீட்டி உள்ளோம். அவர் அடிக்கும் திசையில் ரன் கொடுக்காத அளவுக்கு நெருக்கடி கொடுப்போம். அவர் எக்ஸ்ட்ரா கவர் மற்றும் பைன்-லெக்கில்  பகுதிகளில் ரன்கள் அடிப்பார்.

நாங்கள் தலைசிறந்த பவுலிங் யூனிட் வைத்துள்ளோம். எங்களால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். பஞ்சாப் அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் இதுவரை சிறப்பாக விளையாடி வருகின்றனர். எங்களால் நெருக்கடி கொடுக்க முடியும் என்றால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அது நெருக்கடியாக அமையும். அவர்கள் ரன்கள் அடிப்பதை தடுத்து மிகப்பெரிய ஸ்கோரில் இருந்து எங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

எங்களது பேட்ஸ்மேன் மீதான நம்பிக்கை போதுமான அளவு உள்ளது. அவர்களால் குறிப்பிட்ட அளவு ரன்கள் அடித்துள்ளனர். எங்களை தடுத்து நிறுத்துவதற்கான கடினமான பேட்டிங் ஆர்டரை வைத்துள்ளோம். இந்த மைதானத்தில் இரண்டு முறை விளையாடி உள்ளோம். அதனால் சீதோஷ்ண நிலை குறித்து எங்களுக்கு தெரியும். இது எங்களுக்கு கூடுதலாக உதவியாக இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News