செய்திகள்
ஐதராபாத் வீரர்கள்

ஐபிஎல் 2020: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

Published On 2020-09-29 18:07 GMT   |   Update On 2020-09-29 18:07 GMT
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
அபுதாபி:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இரண்டு போட்டிகளில் ஏமாற்றம் அளித்த இந்த ஜோடி இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
 
அரைசதம் அடித்த பேர்ஸ்டோவ் 48 பந்தில் 53 ரன்கள் அடித்து ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார்.

அதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 26 பந்துகளை சந்தித்த வில்லியம்சன் 5 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் குவித்து வெளியேறினார். 

இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. 

டெல்லி தரப்பில் ரபாடா, அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர். 

5 பந்துகளை சந்தித்த பிரித்வி 2 ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஷ்குமார் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேஷ் ஐய்யர் 21 பந்தில் 17 ரன்கள் எடுத்து ரஷித்கான்
பந்துவீச்சில் அவுட் ஆனார். 

அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால், 31 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த தவானை ரஷித்கான் வெளியேற்றினார்.

அடுத்துவந்த ஹெட்மையர் 12 பந்தில் 21 ரன்கள் எடுத்து புவனேஷ் குமார் பந்து வீச்சில் கேட்ச் முறையில் அவுட் ஆகி வெளியேறினார். 2 சிக்சர்கள் உள்பட 27 பந்தில் 28 ரன்கள் குவித்திருந்த ரிஷப் பண்ட்டையும் ரஷித் கான் வெளியேற்றினார். 

பின்னர் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே
எடுத்தது. இதனால், 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்துவீசிய ஐதராபாத் அணியின் ரஷித் கான் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். புவனேஷ்குமார் 2 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார். 
Tags:    

Similar News