செய்திகள்
தெண்டுல்கர், விராட் கோலி

தெண்டுல்கரின் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் - இர்பான் பதான் நம்பிக்கை

Published On 2020-08-24 21:16 GMT   |   Update On 2020-08-24 21:16 GMT
தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மட்டுமே 100 சதங்கள் (டெஸ்டில் 51, ஒருநாள் போட்டியில் 49) அடித்துள்ளார். அவரது அந்த சாதனையை மற்றவர்கள் எட்டுவது கடினமான காரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் அடிக்க வேண்டும் என்று விராட்கோலி வெளிப்படையாக பேசாவிட்டாலும், அந்த சாதனை குறித்து அவர் மனதில் நினைத்து இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். தெண்டுல்கரை அடுத்து அந்த சாதனையை எட்டக்கூடியவர் யார்? என்று கேட்டால் விராட்கோலியாயாக தான் இருக்க முடியும். விராட்கோலி குறுகிய காலத்தில் நிறைய சாதனைகள் படைத்து இருக்கிறார். தெண்டுல்கரின் இந்த சாதனையை இந்திய வீரர் ஒருவரால் தான் முறியடிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

தெண்டுல்கரின் சாதனைய முறியடிக்கும் அளவுக்கு திறமையும், உடல் தகுதியும் விராட்கோலிக்கு நிறைவாக இருக்கிறது. விராட்கோலி ஓய்வு பெறும் முன்பு தெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட்கோலி 70 சதங்களுடன் (டெஸ்டில் 27, ஒருநாள் போட்டியில் 43) 3-வது இடத்தில் இருக்கிறார். 71 சதங்களுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
Tags:    

Similar News