செய்திகள்
சவுரவ் கங்குலி

பெரும்பாலான போட்டிகளில் முடிவு வராது: நான்கு நாள் டெஸ்டுக்கு கங்குலி எதிர்ப்பு

Published On 2020-07-09 11:30 GMT   |   Update On 2020-07-09 11:30 GMT
டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டால் பெரும்பாலான போட்டிகளில் முடிவு வராது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் என 3 வடிவில் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே டெஸ்ட் போட்டியில் மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்துவதற்காகவும், கால நேரத்தை குறைக்கவும், ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், டெஸ்டை நான்கு நாட்களாக குறைக்க 
ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) பரிந்துரை செய்துள்ளது. 

2023-ம் ஆண்டு நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் இதனை அறிமுகம் செய்யவும், ஐ.சி.சி. உத்தேசித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.


143 ஆண்டுகால டெஸ்ட் போட்டியை 5 நாட்களில் இருந்து நான்கு நாட்களாக குறைக்கலாம் என்ற ஐ.சி.சி.யின் யோசனைக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், லாங்கர், நாதன் லயன் உள்ளிட்ட பல வீரர்கள் ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், (பி.சி.சி.ஐ) முன்னாள் கேப்டனுமான கங்குலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான்கு நாள் டெஸ்ட் போட்டியை பி.சி. சி.ஐ. விரும்பவில்லை. நான்கு நாள் போட்டிக்கு நான் பெரிய ரசிகர் கிடையாது. ஏனென்றால், நான்கு நாட்கள் நடத்தப்பட்டால், பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் முடிவுகள் ஏற்படாது. என்னைப் பொறுத்த வரை டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைப்பது தேவையில்லை. 

கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வடிவிலான ஆட்டமாக டெஸ்ட் இருக்கிறது. 5 நாட்கள் நடத்தப்படுவதால்தான் அது சுவாரஸ்யமாக இருக்கிறது.


இவ்வாறு கங்குலி கூறியுள்ளார். 

தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து - அயர்லாந்து இடையே ஒரே ஒரு நான்கு நாள் டெஸ்ட் போட்டி பரிசோதனை முறையில் நடத்தப்பட்டது.
Tags:    

Similar News