செய்திகள்
எம்எஸ் டோனி

வருகிற 2-ந்தேதி முதல் டோனி ஆன்லைன் மூலம் இளம் வீரர்களுக்கு பயிற்சி

Published On 2020-06-28 08:28 GMT   |   Update On 2020-06-28 08:28 GMT
ஜூலை 2-ந்தேதி எம்எஸ் டோனி ஆன்லைன் அகாடமியை திறப்பதுடன், இளம் வீரர்களுக்கு பயிற்சி குறித்து கொடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. 2 உலக கோப்பை வென்று அவர் நாட்டுக்கு பெருமை சேர்த்தார். 2007-ல் 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையும் டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் எந்தவித போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார். கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் இருந்து  நீக்கப்பட்ட 38 வயதான அவர் எப்போது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல். போட்டியில் ஆடிவிட்டு அதன் மூலம் 20  ஓவர் உலக கோப்பையுடன் டோனி ஓய்வு பெற முடிவு செய்து  இருந்ததாக கூறப்பட்டது.  தற்போது கொரோனாவால் ஐ.பி.எல்.போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுவது சந்தேகமே.

இந்த நிலையில் ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடக்கும் டோனி வருகிற 2-ந்தேதியில் இருந்து ஆன்லைன் மூம் இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்.

இதற்காக பயிற்சி மையத்தை நிறுவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயிற்சி மையத்தின் இயக்குனராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேரியல் கல்லினன் இருப்பார். அதே சமயத்தில் தோனியின் தலைமையின் கீழ் பயிற்சி மையம் செயல்படும்.

இதுகுறித்து டோனியுடன் கைகோர்த்துள்ள ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூறும்போது ‘‘நாங்கள் இந்த முறையில் ஏற்கனவே 200 பேர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். ஜூலை 2-ம் தேதியில் இருந்து  பயிற்சி அளிக்க உள்ளோம். டோனி இதற்கு தலைமை பொறுப்பாளராக இருக்கிறார். மற்ற பயிற்சியாளர்கள் வீரர்களுக்கான பாடங்களை வழங்குவார்கள்’’ என்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News