செய்திகள்
கவுதம் கம்பீர் - சாகித் அப்ரிடி

கொரோனாவில் இருந்து அப்ரிடி விரைவில் நலம்பெற வேண்டும் - கவுதம் கம்பீர்

Published On 2020-06-13 19:31 GMT   |   Update On 2020-06-13 19:31 GMT
அரசியல் ரீதியாக அப்ரிடியுடன் கருத்து மாறுபாடு இருந்தாலும் அவர் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலம்பெற வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடி பாகிஸ்தானில் பொது இடத்தில் காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்ளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் அப்ரிடிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அப்ரிடி, இம்ரான், பாஜ்வா போன்ற ஜோக்கர்கள் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்க இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் விஷத்தைப் பரப்பலாம். ஆனால் தீர்ப்பு நாள் வரை காஷ்மீரை பெறப்போவதில்லை. வங்கதேசம் குறித்து நினைவிருக்கிறதா?” என பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே, சாகித் அப்ரிடி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமையில் இருந்து தனக்கு கடுமையான உடல் வலி ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனை செய்ததில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அரசியல் ரீதியாக அப்ரிடியுடன் கருத்து மாறுபாடு இருந்தாலும் அவர் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலம்பெற வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

சலாம் கிரிக்கெட் 2020 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவுதம் கம்பீர், கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டும். அப்ரிடியுடன் தனக்கு அரசியல் ரீதியான கருத்து மாறுபாடு உண்டு என்றாலும், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News