செய்திகள்
அடுத்த வாரம் பயிற்சி, ஜூன் மாதம் லா லிகா கால்பந்து போட்டிகள்: அமைப்பாளர்கள் அறிவிப்பு
ஸ்பெயின் கால்பந்து லீக்கான ‘லா லிகா’ அடுத்த மாதம் தொடங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஸ்பெயினில் நடைபெற்று வந்த புகழ்பெற்ற ‘லா லிகா’ லீக் கால்பந்து போட்டி கடந்த மார்ச் 12-ந்தேதி முதல் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்பெயின் அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. இதனால் வருகிற திங்கட்கிழமையில் இருந்து ‘டாப்-2’ டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் கால்பந்து அணிகள் பயிற்சியை தொடங்க இருக்கின்றன.
அதற்கு முன்னதாக ஸ்பெயின் நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. முதலில் வீரர்கள் தனித்தனியாக பயிற்சியில் ஈடுபடுவார்கள். அதன்பிறகு சில வாரங்கள் கழித்து அணியாக கூட்டு பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் ‘லா லிகா’ போட்டியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.