செய்திகள்
ராணுவ வீரர்கள்தான் உண்மையான ஹீரோக்கள்: கம்பிர், விராட் கோலி கருத்து
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு கவுதம் கம்பிர், விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட பாதுகாப்பு படையினர் 5 பேர் பலியானார்கள்.
பயங்கரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பிர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விராட் கோலி தனது டுவிட்டர் பதிவில், ‘‘எந்தவொரு சூழ்நிலையிலும் கடமையை மறக்காதவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களின் தியாகத்தை மறக்கக்கூடாது. ஹந்த்வாரா சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் கவுதம் கம்பிர், ‘‘உண்மையான ஹீரோ யார்? நடிகரோ, விளையாட்டு வீரரோ, அரசியல்வாதியோ கிடையாது. எப்பொழுதும் ஒரு உண்மையான ஹீரோ ராணுவ வீரர்தான். அவர்களின் பெற்றோர்களுக்கு சல்யூட். இந்த பூமியில் உலவும் துணிச்சலான ஆன்மாக்கள்’’ என்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.