செய்திகள்
ஷாகிப் அல் ஹசன்

கொரோனா தடுப்புக்கு நிதி திரட்ட உலக கோப்பை பேட்டை ஏலம் விடும் ஷாகிப் அல் ஹசன்

Published On 2020-04-22 10:23 GMT   |   Update On 2020-04-22 10:23 GMT
வங்காள தேசம் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் கொரோனா வைரஸ் தடுப்புக்கு நிதி திரட்ட பேட்டை ஏலம் விட இருக்கிறார்.
வங்காள தேசம் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பையில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தொடரில் இரண்டு சதம், ஐந்து அரைசதங்களுடன் 606 ரன்கள் விளாசினார். அத்துடன் 11 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உலகக் கோப்பை தொடரில் 600 ரன்களுக்கு மேல் ரன்குவித்தும், 10-க்கு மேற்பட்ட விக்கெட்டுகளும் வீழ்த்திய ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. ஏழை மக்கள் உணவின்றி பரிதவித்து வரும் நிலையில், அரசுகள் பணமின்றி தள்ளாடும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரபலங்கள், வீரர்கள், தொழிலதிபர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நிதி திரட்டுவதற்காக உலக கோப்பையில் பயன்படுத்திய பேட்டை ஏலம் விட ஷாகிப் அல் ஹசன் முடிவு செய்துள்ளார். உலக கோப்பை முழுவதும் ஒரே பேட்டை பயன்படுத்தினேன் என்று ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முஷ்பிகுர் ரஹிம் தனது பேட்டை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொரோனா தடுப்பு நிதிக்கு வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News