செய்திகள்
எம்எஸ் டோனி - சோயிப் அக்தர்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் டோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் - சோயிப் அக்தர்

Published On 2020-04-13 04:56 GMT   |   Update On 2020-04-13 04:56 GMT
கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் இந்திய அணி வீரர் டோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நடந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் டோனி 72 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அந்த போட்டிக்கு பிறகு டோனி இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் விளையாடவில்லை. அத்துடன் அவர் இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் 38 வயதான டோனி தனது திறமையை நிரூபித்து, ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள். தற்போது அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி தொடங்க இருந்த ஐ.பி.எல். போட்டி நாளை மறுநாள் (15-ந் தேதி) வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட இருப்பதால் இந்த போட்டி காலவரையின்றி ஒத்திப்போடப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

‘டோனி தனது திறமைக்கு ஏற்ப இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து இருக்கிறார். அவர் உரிய மரியாதையுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற வேண்டும். ஓய்வு விஷயத்தில் அவர் நீண்ட நாட்கள் இழுத்தடித்து வருவது ஏன்? என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அவருடைய இடத்தில் நான் இருந்து இருந்தால், அப்போதே ஓய்வு பெற்று இருப்பேன். நான் குறுகிய வடிவிலான போட்டியில் மேலும் 3 முதல் 4 ஆண்டுகள் விளை யாடி இருக்கலாம். ஆனாலும் நான் 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியுடன் விலகினேன். 100 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்த முடி யாது என்பதை உணர்ந்த தால் ஏன் இழுத்தடிக்க வேண்டும் என நினைத்து ஓய்வு முடிவுக்கு வந்தேன்.

இந்தியாவுக்காக உலக கோப்பையை வென்று கொடுத்து இருப்பதுடன் பல்வேறு மகத்தான சாதனைகளை டோனி செய்து இருக்கிறார். ஒருநாடாக சிறந்த வீரரான அவரை மதிப்புடனும், மரியாதையுடனும் அனுப்ப வேண்டியது அவசியம். உரிய மரியாதையுடன் அவருக்கு பிரியா விடை கொடுக்க வேண்டும். அவர் அருமையான மனிதநேயம் மிக்கவர். தற்போது அவர் திணறுகிறார். உலக கோப்பை அரைஇறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போனபோதே அவர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதனை ஏன் செய்யவில்லை என்பதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் ஒரு பிரியா விடை போட்டி தொடரில் விளையாடி விடைபெற்று இருந்தால் கூட பொருத்தமானதாக இருந்து இருக்கும்.

2018-19-ம் ஆண்டில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை முதல் முறையாக கைப்பற்றியது. இந்த ஆண்டில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும் நல்ல நிலையில் தான் உள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் இந்திய அணியின், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். முந்தைய ஆண்டில் விளையாடாத ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். முந்தைய ஆண்டை போல இந்த முறையும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்டு தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இந்திய அணிக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News