செய்திகள்
கவுதம் கம்பிர்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான உபகரணங்கள் வாங்க ரூ. 50 லட்சம் நிதி வழங்க கவுதம் கம்பிர் உறுதி

Published On 2020-03-24 15:23 IST   |   Update On 2020-03-24 15:23:00 IST
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள் வாங்க டெல்லி அரசுக்கு எம்.பி.க்கள் நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்க தயாராக இருப்பதாக கவுதம் கம்பிர் உறுதியளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 36 மணி நேரத்தில் இந்தியாவில் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இதனால் தலைநகரான டெல்லியில் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் கெஜ்ரிவால் ஊடரங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஏழை மக்களுக்கு ரேசன் பொருட்கள் உள்பட வழங்க ஆணையிட்டுள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி ஏற்பட்டால் உபகரணங்கள் வாங்க டெல்லி அரசுக்கு எம்.பி.க்கள் நிநிதியில் இருந்து 50 லட்சம் ரூபாயை ஒதுக்க தயாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பா.ஜனதா கட்சி சார்பில் எம்.பி.யாக இருப்பவருமான கவுதம் கம்பிர் உறுதியளித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு கவுதம் காம்பிர் எழுதிய கடிதத்தில் ‘‘இந்த கொடிய கொரோனோ வைரஸ் தொற்றில் இருந்து மக்களையும், நகரத்தையும் காப்பாற்ற நாம் ஒன்றிணைந்து மேற்கொண்ட முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். ஒருவேளை சிகிச்சைக்கான உபகரணங்கள் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டால் எம்.பி.க்கள் நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்க தயாராக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேவைகளைப் பற்றி எனது அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகளை தயவுசெய்து அமர்த்துங்கள் என்றும், என்னால் மற்ற உதவிகளும் செய்ய முடியும் என்றால் அதையும் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News