செய்திகள்
4 வது டி20யில் மெதுவான பந்துவீச்சு: இந்திய அணிக்கு அபராதம்
வெலிங்டனில் நடைபெற்ற 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
துபாய்:
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய இந்தியா மணிஷ் பாண்டேயின் அரைசதத்தால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் 20 ஓவர்களுக்கு 165 ரன்கள் குவிக்கவே ஆட்டம் சமனில் முடிந்தது.
இரு அணிகளின் ஸ்கோரும் சமன் ஆனதால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. அதில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 13 ரன்கள் அடித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் இரண்டு ஓவர்கள் தாமதமாக வீசியதாக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது இந்திய அணியினர் மெதுவாக பந்து வீசினார்கள். அவர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை. இதனால் இந்திய வீரர்களுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4வது டி20 போட்டியின் நடுவர்கள் முன்வைத்த இந்த குற்றச்சாட்டை இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.