செய்திகள்
இந்திய ஏ அணி கேப்டன் ஷுப்மான் கில்

முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ

Published On 2020-01-17 08:55 GMT   |   Update On 2020-01-17 08:55 GMT
ஷுப்மான் கில், கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து லெவன் அணியை எளிதாக வென்றது இந்தியா ஏ.
இந்திய ஏ அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. நியூசிலாந்து ஏ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா ஏ அணியின் மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஷுப்மான் கில் உடன் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷுப்மான் அரைசதம் அடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் சேர்த்தார். கெய்க்வாட் 93 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

குருணால் பாண்டியா 31 பந்தில் 41 ரன்கள் சேர்க்க இந்தியா ஏ 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் குவித்தது. அடுத்து நியூசிலாந்து ஏ 280 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

தொடக்க வீரர்கள் ஜேக்கப் புலா, ஜேக் பாய்ல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜேக்கப் புலா 50 ரன்னிலும், ஜேக் பாய்ல் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியே நியூசிலாந்து ஏ 187 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ஏ அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா ஏ அணி சார்பில் முகமது அஹமது 4 விக்கெட்டும் முகமது சிராஜ் மற்றும் குருணால் பாண்டியா ஆகியோர் தலா  இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News