செய்திகள்
ரோகித் சர்மா

தொடரை கைப்பற்றப் போவது யார்?: 3வது டி20 போட்டியில் இந்தியா-வங்காளதேசம் மோதல்

Published On 2019-11-10 02:01 GMT   |   Update On 2019-11-10 02:01 GMT
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3வது டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இதில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்புடன் உள்ளன.
நாக்பூர்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

டெல்லியில் நடந்த முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசமும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்றிரவு நடைபெறுகிறது.
 
தொடக்க ஆட்டத்தில் பேட்டிங்கிலும், கடைசிகட்ட பந்து வீச்சிலும் கோட்டை விட்ட இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் சுதாரிப்போடு விளையாடி வெற்றிக்கனியை பறித்தது. கேப்டன் ரோகித் சர்மா 6 சிக்சருடன் 85 ரன்கள் குவித்து அசத்தினார். யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் சுழலில் மிரட்டினர். இன்றைய ஆட்டத்திலும் அதே உத்வேகத்துடன் ஆடி தொடரை வசப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளனர். 
இரண்டு ஆட்டங்களிலும் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ரன்களை வாரி வழங்கியுள்ளார். அனேகமாக இந்த ஆட்டத்தில் அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இளம் வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் அவ்வப்போது தடுமாறுகிறார்.



மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேச அணி முதல் ஆட்டத்தைப் போன்று மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வேட்கையுடன் காத்திருக்கிறது. முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, சவுமியா சர்கார் ஆகியோரின் பேட்டிங்கை தான் அந்த அணி நிர்வாகம் அதிகமாக சார்ந்துள்ளது.
 
வங்காளதேச பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ கூறுகையில், இப்போது தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. வீரர்களும் சாதிக்கும் துடிப்பில் உள்ளனர். எது எப்படியோ, இந்தியா உலகின் சிறந்த அணிகளில் ஒன்று என்பதை மறுக்க முடியாது. நாங்கள் எங்களது திறமைக்கு தக்கபடி விளையாடினால் வெற்றி வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் இதுவரை 11 இருபது ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே 8 முறை வெற்றி பெற்றுள்ளன. இதில் இந்திய அணி ஆடிய 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும் (இங்கிலாந்துக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (இலங்கை, நியூசிலாந்துக்கு எதிராக) கண்டுள்ளது.

2009-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 215 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2016-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 79 ரன்னில் சுருண்டது மோசமான ஸ்கோராகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், கலீல் அகமது அல்லது ஷர்துல் தாகூர்.

வங்காளதேசம்: லிட்டான்தாஸ், முகமது நைம், சவுமியா சர்கார், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா (கேப்டன்), அபிப் ஹூசைன், மொசாடெக் ஹூசைன், அமினுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம் அல்லது தைஜூல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான், அல்-அமின் ஹூசைன்.
Tags:    

Similar News