செய்திகள்
ரிஷப் பந்த் மீதான விமர்சனப் பார்வையை விலக்கிக் கொள்ளுங்கள்- ரோகித் சர்மா
ரிஷப் பந்தை விமர்சிக்க வேண்டாம், அவரை தனியாக விட்டு விடுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
நாக்பூர்:
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் டோனி உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. டோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக உருவெடுக்கும் ரிஷப் பந்திற்கு ஒரு விதமான அழுத்தம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. கடந்த 3ம் தேதி டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்காளதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
அந்த போட்டியில் தவறான ரிவியுவ் எடுக்க வலியுறுத்தி ரிஷப் பந்த் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இரண்டாவது டி20 போட்டி கடந்த 7ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில் வங்காள தேசம் அணி பேட் செய்தது. அந்த போட்டியிலும் ரிஷப் பந்த் தவறிழைத்தார்.
சாஹல் வீசிய 6 வது ஓவரில் வங்காள தேச வீரர் லிட்டன் தாஸ் கிரீசை விட்டு வெளியேறி பந்தை அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது பேட்டில் படவில்லை. ரிஷப் பந்த் அவரை ஸ்டம்பிங் செய்தார். ஐ.சி.சி விதிமுறைகள் படி பந்து ஸ்டம்பை கடந்த பிறகே ஸ்டம்பிங் செய்ய வேண்டும். ஆனால் பந்து ஸ்டம்பை கடக்கும் முன்பே அவர் பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்ததால் அது அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் ரிஷப் பந்தின் இந்த செயல் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், ரிஷப் பந்தை யாரும் விமர்சிக்க வேண்டாம், அவரை தனியாக விட்டு விடுங்கள் அவர் அணி நிர்வாகத்தின் யுக்தியை செயல்படுத்தவே முயல்கிறார், என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அனைவரும் ரிஷப் பந்தை பற்றியே விமர்சிக்கிறார்கள். களத்தில் அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை செய்ய அனுமதிக்க வேண்டும். அவர் மீதிருந்து உங்களது விமர்சன பார்வையை விலக்கிக்கொள்ளுங்கள்’ என ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
டோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிட வேண்டாம். ரிஷப் டோனியிடமிருந்து கற்றுக்கொண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொள்ள வேண்டும், என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.