செய்திகள்
சதமடித்த மயங்க் அகர்வால்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 273/3

Published On 2019-10-10 11:39 GMT   |   Update On 2019-10-10 11:39 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் மயங்க் அகர்வாலின் சதத்தால் இந்தியா 3 விக்கெட்டுக்கு 273 ரன்களை எடுத்துள்ளது.
புனே:

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது.
 
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதமடித்த ரோகித் சர்மா இம்முறை 14 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய புஜாரா அகர்வாலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக ஆடினர். இந்த ஜோடி 138 ரன்கள் சேர்த்தது.



அரை சதமடித்த புஜாரா 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்டிலும் மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடி அசத்தினார். அவர் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். அவர் 108 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், அஜிங்கியா ரகானேவும் பொறுமையாக ஆடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். கேப்டன் விராட் கோலி அரை சதமடிது அசத்தினார். 

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 85.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்துள்ளது. கோலி 63 ரன்னுடனும், ரகானே 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Tags:    

Similar News