செய்திகள்
சதமடித்த ரோகித் சர்மா

முதல் டெஸ்ட் - தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2019-10-05 11:58 GMT   |   Update On 2019-10-05 11:58 GMT
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 395 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்திய அணி.
விசாகப்பட்டினம்:

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
 
அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் எல்கர் 160 ரன்களும் டி காக் 111 ரன்களும் கேப்டன் டுபிலிசிஸ் 55 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து, 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, அகர்வால் களமிறங்கினர். 

முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் 7 ரன்னில் அவுட்டானார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்து ஆடினார்.



இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். அரை சதமடித்த புஜாரா 81 ரன்னில் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா 40 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய விராட் கோலியும், அஜிங்கியா ரகானேவும் விக்கெட் விழாமல் நின்றனர்.

இறுதியில், 67 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. விராட் கோலி 31 ரன்னுடனும், ரகானே 27 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, 395 ரன்களை இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.
Tags:    

Similar News