செய்திகள்
இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் - கடைசி நாளில் இலங்கை வெற்றி பெற 75 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற கடைசி நாளில் 75 ரன்கள் தேவைப்படுவதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #SLvENG
இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பல்லேகெலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலி்ல் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் சேர்த்தது. பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருணாரத்னே (63), தனஞ்ஜெயா டி சில்வா (59), ரோஷென் சில்வா (85) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 336 ரன்கள் குவித்தது.
46 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி 124 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் அரைசதம் அடிக்க இங்கிலாந்து 80.4 ஓவரில் 346 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் அகிலா தனஞ்ஜெயா 6 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி 88 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெலா 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 4 விக்கெட் கைப்பற்றினார்.
போட்டியின் இறுதி நாளில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 75 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இலங்கை அணி வெற்றி பெறுமா அல்லது இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #SLvENG