செய்திகள் (Tamil News)
3வது ஒருநாள் போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் தொடரையும் கைப்பற்றியது
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. #AFGvIRE
ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய டி-20 தொடரில் ஆப்கானிஸ்தான் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், இரண்டாவது போட்டியில் அயர்லாந்தும் வெற்றி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கிய அயர்லாந்து அணி 36.1 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் கேரி வில்சன் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், அப்தாப் ஆலம், குலாப்தின் நயிப், மொகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. இஷானுல்லா ஜனாத் சிறப்பாக அடி அரை சதம் எடுத்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 23.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது, இஷானுல்லா ஜனாத் 57 ரன்னுடனும், ஹஷ்மதுல்லா ஷகிதி 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. தொடர் நாயகனாக ரஷித் கான் தேர்வு செய்யப்பட்டார். #AFGvIRE