செய்திகள்

மீண்டும் இலங்கை சுழலில் சிக்கியது தென்ஆப்பிரிக்கா- கொழும்பு டெஸ்டில் 124 ரன்னில் சுருண்டது

Published On 2018-07-21 09:13 GMT   |   Update On 2018-07-21 09:13 GMT
கொழும்பில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா பெரேரா, தனஞ்ஜெயா சுழற்பந்து வீச்சில் சிக்கி 124 ரன்னில் சுருண்டது. #SLvSA
இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் நேர்த்தியாக பந்து வீசி 8 விக்கெட் வீழ்த்தவும், அதேநேரத்தில் இலங்கையின் குணதிலகா (57), கருணாரத்னே (53), டி சில்வா (60) ஆகியோர் அரைசதம் அடிக்கவும் இலங்கை நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்ஜெயா 16 ரன்களுடனும், ஹெராத் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹெராத், தனஞ்ஜெயா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹெராத் 35 ரன்னில் அவுட் ஆக, தனஞ்ஜெயா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை அணி 338 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 9 விக்கெட் வீழத்தி அசத்தினார்.



பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. தனஞ்ஜெயா, தில்ருவான் பெரேரா ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டே இருந்தனர். கேப்டன் டு பிளிசிஸ் மட்டும் தாக்குப்பிடித்து 48 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் டி காக் 32 ரன்கள் சேர்க்க 34.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. தனஞ்ஜெயா 5 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 126 ரன்னிலும், 73 ரன்னிலும் தென்ஆப்பிரக்கா சுருண்டது. தற்போது 124 ரன்னில் சுருண்டுள்ளது.
Tags:    

Similar News