செய்திகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தியது கோவை கிங்ஸ்
திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் லைகா கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. #TNPL2018 #LycaKovaiKings #KaraikudiKaalai
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடைபெற்ற லீக் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை லைகா கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற காரைக்குடி காளை பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் மான் மாப்னா 22 பந்தில் 44 ரன்கள் அடித்தார். அவருக்கு ஆதித்யா ஒத்துழைப்பு தந்தார். அவர் 36 ரன்களில் அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடாததால் காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.
கோவை கிங்ஸ் சார்பில் பிரசாந்த் ராஜேஷ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். ஷாருக் கான் 32 ரன்களும், அஷ்வின் வெங்கட்ராமன் 34 ரன்களும் எடுத்தனர்.
மற்றவர்கள் நிலைத்து நிற்காததால் கோவை அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய கோவை கிங்ஸ் ஒரு ஓவரில் 1 விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய காரைக்குடி காளை 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கோவை கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.