செய்திகள்

மனைவியுடன் சமரசம் செய்து கொள்ள தயார்- முகமதுசமி

Published On 2018-03-12 02:40 GMT   |   Update On 2018-03-12 02:40 GMT
நான் எனது மனைவியுடன் சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமதுசமி கூறியுள்ளார். #MohammedShami #HasinJahan
கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமதுசமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார், அவரும், அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர், கொலை செய்யக்கூட முயற்சிக்கிறார்கள் என்று அவரது மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். இதையடுத்து சமி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் முகமது சமி, மனைவிக்கு சமாதான தூது அனுப்பி இருக்கிறார். அவர் கூறுகையில், ‘எனது மனைவியுடன் நான் சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். மனைவி, மகளுடன் என்னால் சேர்ந்து வாழ முடியும். நான் ஒரு அப்பாவி, எனக்கு எதிராக சதி நடக்கிறது. எனது மனைவியை யாரோ ஒருவர் தவறாக வழிநடத்துகிறார். இந்த சர்ச்சையால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் அது பயிற்சியையும் பாதித்துள்ளது’ என்றார்.

ஆனால் முகமது சமியின் சமரசத்தை ஏற்க மறுத்துள்ள ஹசின் ஜஹன், ‘கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு ஏற்ற மாதிரி என்னை மாற்றிக்கொண்டேன். ஆனால் அவரோ தொடர்ந்து தவறுகள் செய்தாரே தவிர திருந்தவில்லை. இந்த பிரச்சினையில் இப்போது போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். எனது வழக்கறிஞரின் ஆலோசனைப்படி நான் செயல்படுகிறேன். மற்ற பெண்களுடன் சமிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் உள்ள செல்போன் என்னிடம் இருக்கிறது. அந்த செல்போன் மட்டும் என்னிடம் இல்லாவிட்டால் இந்த நேரம் அவர் என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கியிருப்பார்’ என்றார்.
Tags:    

Similar News