செய்திகள்

3 வருடத்திற்குப் பிறகு டி வில்லியர்ஸ் சதம் அடித்து அசத்தல்

Published On 2018-03-11 15:02 IST   |   Update On 2018-03-11 15:02:00 IST
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போர்ட் எலிசபெத் டெஸ்டில் டி வில்லியர்ஸ் சதம் அடித்து அணியை முன்னிலைப் பெற செய்துள்ளார். #SAvAUS
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. வார்னர் 63 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர் (57), ஹசிம் அம்லா (56) அரைசதம் அடித்து அவுட்டானார்கள். அதன்பின் வந்த முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்த போதிலும், அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டி வில்லியர்ஸ் அரைசதம் அடிக்க நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 74 ரன்களுடனும், பிலாண்டர் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 300-ஐ தாண்டியது. அணியின் ஸ்கோர் 311 ரன்னாக இருக்கும்போது பிலாண்டர் 36 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து மகாராஜ் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய டி வில்லியர்ஸ் 109-வது ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரின் 22-வது சர்வதேச டெஸ்ட் சதமாகும். இதற்கு முன் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் சதம் அடித்திருந்தார்.

அதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போதுதான் சதம் அடித்துள்ளார். இவரது சதத்தால் தென்ஆப்பிரிகா முதல் இன்னிங்சில் 100-க்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. #SAvAUS #AUSvSA

Similar News