செய்திகள்

முத்தரப்பு தொடர்: இறுதி போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை

Published On 2018-01-27 20:12 GMT   |   Update On 2018-01-27 20:12 GMT
வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில், இலங்கை அணி வங்காளதேசத்தை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #SrilankaVSBangladesh #Triseries
டாக்கா:

வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில், இலங்கை அணி வங்காளதேசத்தை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

வங்காளதேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதின. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.



டாக்காவில் நேற்று நடந்த இறுதி போட்டியில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகாவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர்.

குணதிலகா விரைவில் ஆட்டமிழந்தார். அதன்பின் இறங்கிய குசால் மெண்டிஸ் தரங்காவுக்கு ஈடுகொடுத்தார். மெண்டிஸ் 24 ரன்னில் அவுட்டானார். ஓரளவு பொறுப்பாக விளையாடிய தரங்கா அரை சதமடித்து 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதன்பின், ஓரளவு தாக்குப் பிடித்து விளையாடிய டிக்வெலா 42 ரன்னிலும், சண்டிமால் 45 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், இலங்கை அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் அணி சார்பில் ருபெல் ஹோசைன் 4 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து, 222 ரன்கள் என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியின் மகமதுல்லா மட்டுமே பொறுப்பாக விளையாடி 76 ரன்கள் எடுத்து அவுட்டானார். இலங்கை அணியினரின் துல்லியமான பந்துவீச்சால் மற்ற விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இதனால், வங்காளதேசம் அணி 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை அணி சார்பில் மதுஷன்கா 3 விக்கெட்டும், தனஞ்செயா, சமீரா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, இலங்கை அணி 79 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News