செய்திகள்

ஐ.பி.எல்.: ஐதராபாத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Published On 2017-04-15 17:57 IST   |   Update On 2017-04-15 17:57:00 IST
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஐ.பி.எல். 10 சீசனின் 14-வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவிற்கு எதிராக டாஸ் வென்று ஐதராபாத் பீல்டிங் தேர்வு செய்தது. ஐதராபாத் அணியில் ஹென்றிக்ஸ், பிபுல் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளனர். முஷ்டாபிஜூர் ரஹ்மான், விஜய் சங்கர் நீக்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவிற்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

கொல்கத்தா அணியின் சுனில் நரைன், காம்பீர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நரைன் 6 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் க்ளீன் போல்டானார். அடுத்து களம் இறங்கிய உத்தப்பா முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோல்டன் டக்கில் இருந்து உத்தப்பா தப்பினார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

காம்பீர் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்தில் வெளியேறினார். அடுத்து உத்தப்பா உடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. உத்தப்பா 39 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மணீஷ் பாண்டே 35 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார்.

இருவரின் ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்துள்ளது. ஐதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கி விளையாடி வருகிறது.

Similar News