செய்திகள்

மேட்ச் பிக்சிங் விவகாரம்: முகம்மது இர்பான் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை

Published On 2017-03-29 14:41 GMT   |   Update On 2017-03-29 14:41 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகம்மது இர்பான் கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

ஐபிஎல் பாணியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்னும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் துபாயில் கடந்த மாதம் நடத்தப்பட்டன. இந்த தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய முகம்மது இர்பானை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் தடுப்பு நடத்தை விதியை மீறியதாக முகம்மது இர்பான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. கிரிக்கெட் வாரியத்தின் விசாரணைக்குழு முன் ஆஜரான முகம்மது இர்பான் சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, முகம்மது இர்பான் கிரிக்கெட் விளையாட தற்காலிக தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.



இந்த நிலையில், முகம்மது இர்பானுக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதித்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 1 மில்லியன் டாலர்கள் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முகம்மது இர்பான் கூறுகையில் “இதற்காக நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் என்னை மன்னிப்பார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Similar News