செய்திகள்

5-வது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி 3-2 என தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

Published On 2017-03-24 16:21 GMT   |   Update On 2017-03-24 16:21 GMT
5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி, 3-2 என தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான். ரஹ்மத் ஷா சதம் அடித்து அசத்தினார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தானுக்கும், அயர்லாந்திற்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள கிரேட் நொய்டாவில் நடைபெற்றது. கிரேட் நொய்டாவை ஆப்கானிஸ்தான் சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் மூலம் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய அந்த அணி 48.1 ஓவரில் 229 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர்கள் ஜாய்ஸ் (42), ஸ்டிர்லிங் (51), போர்ட்டர்பீல்டு (34), ஓ'பிரைன் (34) ஆகியோரின் உதவியால் அயர்லாந்து 200 ரன்னைத் தாண்டியது.



பின்னர் 230 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தானின் மொகமது ஷேசாத், நஜீப் தராகை தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷேசாத் 13 ரன்னிலும், நஜீப் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

ஆனால், 3-வது நபராக களம் இறங்கிய ரஹ்மத் ஷா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் அவுட்டாகாமல் 108 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் 48.4 ஓவரில் 231 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரஹ்மத் ஷா 128 பந்தில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 108 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக அஸ்கார் ஸ்டானிக்சாய் 39 ரன்னும், சமியுல்லா ஷான்வாரி 62 (அவுட் இல்லை) ரன்னும் எடுத்து வெற்றிக்கு துணை புரிந்தனர்.



இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-2 எனக் கைப்பற்றியது.

சதம் அடித்த ரஹ்மத் ஷா ஆட்ட நாயகன் விருதும், அயர்லாந்தைச் சேர்ந்த ஸ்டிர்லிங் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

Similar News