செய்திகள்

ஊக்கமருந்து சர்ச்சை: இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவிற்கு 4 ஆண்டு தடை

Published On 2016-08-19 06:24 IST   |   Update On 2016-08-19 06:24:00 IST
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கிலோ) வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

கடந்த ஜூன் 25-ல் இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தடைசெய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் கலந்து கொள்வது கேள்விக்குறியானது.

இதற்கிடையே தேசிய ஊக்கமருந்து சோதனை அமைப்பின் ஆணையம் நர்சிங் யாதவ் பிரச்சனை குறித்து விசாரணை நடத்தியது. அப்போது, தனக்கு தெரியாமல் உணவில் ஊக்கமருந்தை கலந்து விட்டதாகவும், இது தனக்கு எதிராக நடந்த சதி என்றும் நர்சிங் யாதவ் குற்றம்சாட்டினார். மேலும், ஆணையம் முன் ஆஜராகி 600 பக்க விளக்கத்தையும் சமர்ப்பித்தார்.

விசாரணை முடிவில் ‘‘நரசிங் யாதவ் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். நரசிங் மீது எந்த தவறும் இல்லை. விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளார்’’ என்று ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) நர்சிங் யாதவிற்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை எதிர்த்து உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) முறையீடு செய்தது.

இந்நிலையில், உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் முறையீட்டு மனுவை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதித்துள்ளது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்துள்ளது.

Similar News