சிறப்புக் கட்டுரைகள்

குழந்தைகளை பாதிக்கும் சிறுநீர் கிருமி தொற்று

Published On 2024-04-20 07:13 GMT   |   Update On 2024-04-20 07:13 GMT
  • சின்னக் குழந்தைகள் சிறுநீர் போகும்போது அழுவது, விட்டுவிட்டு சிறுநீர் போவது, தங்களையே அறியாமல் சிறுநீர் போவது இதன் அறிகுறிகளாகும்.
  • சிறுநீர் கிருமி தொற்று உள்ள குழந்தைகள் அதிகமாக நீராகாரம் உட்கொள்ள வேண்டும்.

பொதுவாகவே குழந்தைகள் பல்வேறு நோய்கள் மற்றும் உடல் நல பிரச்சனையால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். எனவே பெற்றோர்கள், குழந்தைகளை ஆரோக்கியமாகவும், கவனமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

சிறுநீர் கிருமி தொற்று பெரியவர்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என்று நினைத்து விடக்கூடாது. அது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரக்கூடியது.

சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறும் துவாரம் வரை உள்ளதுதான் சிறுநீர்ப்பாதை. இந்தப் பாதையில் ஏற்படும் தொற்றைத்தான் சிறுநீர்ப்பாதைதொற்று என்கிறோம்.

நோய் தொற்றுகள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் கூட காணப்படுகின்றன. சிறுநீர்ப் பாதையில் இத்தொற்று எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இதன் விளைவாக, சிறுநீர்ப்பாதையில் எரிச்சல், அரிப்பு உண்டாகலாம். இந்த தொற்று என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் பச்சிளம் சிசுக்களுக்கும் கூட ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பாதையில் கிருமித்தொற்று வருவது என்பது பொதுவான பாதிப்பு ஆகும். குழந்தைகள் சிறுநீர் கழிப்பதற்கு சிரமப்பட்டாலோ, சீராக சிறுநீர் போகவில்லை என்றாலோ பெற்றோர் அலட்சியம் காட்டக் கூடாது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

அறிகுறிகள் என்னென்ன?

சின்னக் குழந்தைகள் சிறுநீர் போகும்போது அழுவது, விட்டுவிட்டு சிறுநீர் போவது, தங்களையே அறியாமல் சிறுநீர் போவது இதன் அறிகுறிகளாகும். இதுமட்டுமின்றி, குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் கலந்து வரும். சிறுநீர் கழித்த பிறகு துர்நாற்றம் வீசக்கூடும். சிறுநீர் கலங்கலாக இருக்கும், அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வார்கள்.

குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது சிரமப்படுவார்கள். அதிலும் குறிப்பாக முக்கி போவார்கள். அல்லது போகாமல் அடைத்துக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. இந்த தொந்தரவுகள் இருந்தால் குழந்தைகளின் பெற்றோர் அவர்களை முதலில் குழந்தைகள் மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெற வேண்டும்.

சின்னக்குழந்தைகளுக்கு சிறுநீர் கிருமி தொற்று இருக்கும்போது காய்ச்சல் மட்டும் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதனை நீங்கள் வழக்கமான காய்ச்சல் என்று நினைத்து விட்டு விடக்கூடாது. குழந்தைகளுக்கு எந்தவித காரணமும் இல்லாமல் காய்ச்சல் வந்தால் சிறுநீர் பாதையில் சிறுநீர் கிருமி தொற்று பாதிப்புகள் இருக்கிறதா? என்பதை டாக்டரிடம் சென்று சிகிச்சை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். இதுதவிர குமட்டல் உணர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவையும் இருக்கக்கூடும். இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது கவனித்து வந்தால் ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிக்கலாம்.

பரிசோதனைகள்

சிறுநீர் தொற்று அறிகுறி இருக்கும்போது மருத்துவரை அணுகினால் யூரின் கல்ச்சர் டெஸ்ட் எனப்படும் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். குழந்தைகளின் வயதினை பொறுத்து பரிசோதனைகளும் மாறுபடும். இந்த பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் தகுந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுத்து தொற்று சரி செய்யப்படும். இது பாதிப்பை குணப்படுத்தும் சிகிச்சை. இந்த சிகிச்சையானது தொற்றுக் கிருமிகளை முழுவதுமாக வெளியேற்றுகிறது.

சிறுநீர் பரிசோதனையோடு நிறுத்தி விடாமல் எதனால் இந்த பாதிப்பு வந்தது என்பதை முழுமையாக ஆராய வேண்டும். பொதுவாக சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு ஏற்படும் குழந்தைகளுக்கு பிறப்பதற்கு முன்பே சிறுநீரகத்தில் ஏதாவது பாதிப்புகள் இருந்திருக்கலாம். அதனை நாம் கண்டுபிடித்ததற்கு பிறகு சிறுநீரக பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து விரிவாக பரிசோதனை செய்யப்படும்.

சிறுநீர் தொற்று ஏற்படுபவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படும். அதில் சிறுநீரகத்தில் வீக்கம் அல்லது குறைபாடுகள் இருந்தாலும் சிறுநீர் பையில் குறைபாடுபாடுகள் இருந்தாலும் கண்டறியப்பட்டு விடும். அதற்கு எம்.சி.யு.ஜி என்ற பரிசோதனை செய்யப்படும். சிறுநீர் தொற்று பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு கட்டாயமாக இந்த பரிசோதனையை செய்ய வேண்டும்.

ஒருமுறை தொற்று நேர்ந்தால் மீண்டும் பிள்ளைகளுக்கு அடிக்கடி தொற்று நேரிட வாய்ப்புண்டு. அதனால் மிக கவனமாக குழந்தைகளை கையாள வேண்டும்.. தொற்று சரியான பிறகும் கூட பிள்ளைகளை உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

 

டாக்டர் பரணிகுமார்

பாதிப்புகள் என்னென்ன?

சிறுநீரகத்தின் பாதையில் அடைப்பு, ரிப்ளக்ஸ் எனப்படும் சிறுநீர் மூத்திரப் பையில் இருந்து மேலே செல்லும் பிரச்சினை, சிறுநீர் வெளிவரும் பாதையில் அடைப்பு, ஆண் குழந்தைகளுக்கு முன் தோல் மூடல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் சிறுநீர் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதில் பெரும்பாலானவை வளர்ச்சிக் குறைபாடு காரணத்தால் பிறவியிலேயே ஏற்படும் பிரச்சினைகள் ஆகும். இவற்றை பூரணமாக சரி செய்வதற்கான வழி வகைகளும் இருக்கத் தான் செய்கிறது.

எம்.சி.யு.ஜி என்ற(சிறுநீர்பை மற்றும் கீழ் சிறுநீர் பாதை பற்றிய விரிவான எக்ஸ்ரே ஆய்வு) பரிசோதனை செய்து, சிறுநீரக செயல்பாட்டுக்கான நியூக்ளியர் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். பரிசோதனைகளின் முடிவில் நமக்கு தேவைப்படும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்:

சிறுநீர் கிருமி தொற்று உள்ள குழந்தைகள் அதிகமாக நீராகாரம் உட்கொள்ள வேண்டும். குழந்தைகள் பெரும்பாலும் சிறுநீரை அடக்கி வைத்து போவார்கள். அந்த மாதிரியான செயல்களை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைகளை சவுகரியமாக உட்கார வைத்து சிறுநீர் கழிக்க வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு தினமும் மலம் கழிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தி வைக்க வேண்டும்.

இரவு தூங்குதவற்கு முன்பாக குழந்தைகளை அழைத்து சென்று சிறுநீர் கழிக்க வைக்க வேண்டும். சிறுநீர் கழித்த பின்பே தூங்க வைக்கும் பழக்கத்தையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

சிறுநீர்ப்பாதை பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு இரவு தூங்கும் முன்பு பால் மற்றும் நீர் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதனை நிறுத்த சொல்வதற்கு முக்கிய காரணம் சிறுநீர் பையில் நீர் தங்கும்போது தொற்று பாதிப்பு ஏற்படும். அதனை தவிர்ப்பதற்காகவே குழந்தை தூங்கும் முன்பு பால், நீர் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்.

சிறுவயது முதல் குழந்தைகளுக்கு சரியான முறையில் சிறுநீர் கழிப்பதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும். குழந்தைகள் வளர ஆரம்பித்ததும் டயப்பர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை குளிக்க வைக்கும்போது சிறுநீர்ப்பாதை உறுப்புகளை நன்றாக சுத்தம் செய்து விடுங்கள்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போது, முடித்தவுடன் குழந்தைகளின் பிறப்பு உறுப்பை சுத்தம் செய்து விடுங்கள். துரித உணவுகள், கடினமான, காரமான, மசாலா அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்த்து மென்மையான உணவுகளை வழங்குங்கள்.

சிகிச்சைகள்

சிறுநீர் தொற்று ஏற்பட்டால் சரியான ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொண்டு, காரணங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு அதிகமாவதோடு, சிறுநீரக பாதிப்பினையும் ஏற்படுத்தி விடும். இதனால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எனவே வரும்முன் காப்போம் என்பது போல தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டு சரி செய்ய வேண்டும்.

குழந்தைகள் தங்கள் அறியாத வயதில் படுக்கையிலேயே சிறுநீர் போவார்கள். பெரியவர்களானதும் இந்த பிரச்சினையானது சரியாகிவிடும் என்று நாம் நினைப்பது இயல்பானது தான். ஆனால் 5 வயதுக்கு மேல் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரை அணுகி இதனை எடுத்து கூறி பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

படுக்கையில் சிறுநீர் போய் விட்டது என்பதற்காக குழந்தையை தண்டிக்க கூடாது. அப்படி நாம் செய்யும் செயல் அவர்களுக்கு தேவையற்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடும். அதனால் பெற்றோர் இதில் மிக கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பாதிப்புகளுக்கான சிகிச்சைகள், பாதிப்பின் தன்மையை பொறுத்து வேறுபடும். அடைப்பு இருக்கும் பட்சத்தில் அடைப்பை எண்டோஸ்கோபி வழியாக சரி செய்யப்படும்.

ரிப்ளக்ஸ் பாதிப்பு இருந்தால் அதற்கும் எண்டோஸ்கோபி வழியாக மருந்து செலுத்தப்படும். அல்லது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

ஆண் குறியில் முன்தோல் மூடல் பாதிப்பிற்கு, பிறந்த குழந்தைகளை குளிக்க வைக்கும்போது முன் தோலை விலக்கி அதனை சுத்தம் செய்ய வேண்டும். விலக்க முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகி சுன்னத் சிகிச்சை செய்து கொள்வது நல்லது. இதனை இளம் வயதிலேயே செய்து கொள்வது சிறந்ததாகும். இது எந்தவிதமான பாதிப்புகளையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

எங்கள் மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கான அனைத்து நவீன மருத்துவ சிகிச்சைகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக எண்டாஸ்கோபி சிகிச்சை, ரோபோடிக் சிகிச்சை ஆகியவை அனுபவமிக்க மருத்துவ குழுவினர் மூலம் மிக சிறப்பாக செய்து வருகிறோம். சரியான சிகிச்சையோடு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையிலும் நாம் தெளிவாக கவனம் செலுத்தினோம் ஆனால் சிறுநீர் தொற்று வராமல் தடுத்து நல் ஆரோக்கியமாக வாழலாம்.

தொடர்புக்கு:

73393 33485, 0422 4323707

Tags:    

Similar News