சிறப்புக் கட்டுரைகள்

திருவிடைமருதூர் அருகே உலகாட்சி அம்மன்!

Published On 2024-05-31 15:37 IST   |   Update On 2024-05-31 15:37:00 IST
  • கருவறையில், அன்னையின் இடது பாதத்தின் கீழ் அசுரன் மிதிபட்டுக் கிடக்க, அவளின் வலது கால் தூக்கி மடக்கிவைத்த நிலையில் காணப்படுகிறது.
  • தேவிக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் அன்னையை வழிபட்டால், சகல நன்மைகளையும் அருளி காத்திடுவாள்.

கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூரில் இறங்கினால், ஒரு பர்லாங் தூரத்தில் ஸ்ரீ உலகாட்சி அம்மன் ஆலயம் உள்ளது.

முதலாம் பராந்தக சோழனால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அம்பிகை, திருவிடைமருதூர் செங்கழுநீர் வாருணிக்கு வடகரையில் (தெற்கு விதி) சிறு கோட்டத்தில் குடிகொண்டுள்ளாள். நிசும்பசூதனி எனும் வடிவுடைய பத்ரகாளியே ஆயினும், உலகத்துக்கே தாயாக விளங்கி அருளாட்சி செய்யும் அன்னைக்குச் சோழ மன்னர்கள் ஸ்ரீஉலகாட்சி யம்மை என்று திருநாமம் சூட்டி வழிபட்டுள்ளனர்.

கருவறையில், அன்னையின் இடது பாதத்தின் கீழ் அசுரன் மிதிபட்டுக் கிடக்க, அவளின் வலது கால் தூக்கி மடக்கிவைத்த நிலையில் காணப்படுகிறது. வலதுபுறத்து நான்கு கரங்களில் குறுவாள், போர்வாள், வில், உடுக்கை ஆகியவை உள்ளன. இடதுபுறத்து நான்கு கரங்களில் விஸ்மய முத்திரை, அம்பு, கேடயம், கபாலம் ஆகியவை இருக்கின்றன. கீழிரு கரங்களில் சூலாயுதத்தைத் தாங்கியிருக்கிறாள்.

வலிமை பொருந்திய அசுரனை அழிக்க வந்தவளாக... கோரைப் பற்களும், பிதுங்கி சிவந்த விழிகளும், வளைந்து உயர்ந்த புருவங்களும், தீப்பிழம்பு போன்ற நெற்றிக் கண்ணும் துலங்க, இந்த அன்னை மறக்கருணையோடு காட்சி அளிக்கிறாள். முகத்தில் அறக்கருணை வெளிப்படுகிறது. அன்னையின் சிரசில் சூரிய சந்திரரும் சூலக் குறியும் திகழ, அதற்கு நேர்மேலாக சர்ப்பம் பொறிக்கப் பெற்றுள்ளது. மேலாடைக்குப் பதிலாக அரவம் புனைந்து காட்சி தரும் இந்த மாகாளி, தன்னை வணங்கிடுவோருக்கு அருள்மழைப் பொழியும் கற்பகமாக விளங்குகிறாள்.

பராந்தக சோழன் காலத்தில் வெற்றித் தெய்வமாக வழிபட பெற்ற இந்த அன்னையின் ஆலயம் காலப்போக்கில் சிதிலமடைந்து போன, 1962-ம் வருடத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றில் முற்றிலும் சேதமுற்றது. ஆயினும், இந்த அன்னையின் திருமேனி மட்டும் எவ்வித சேதமும் இன்றி பொலிவுடன் இருந்ததை வியப்புடன் சொல்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு, திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதினத்தின் ஒத்துழைப்பாலும், பக்தர்களின் சீரிய முயற்சியாலும் புது ஆலயம் எழுப்பப் பெற்று குடமுழுக்கு செய்யப்பட்டது.

"இந்தக் காளி நரம்பு மண்டலத்துக்கு அதிபதி. ராகு கிரகத்துக்குரிய தேவதை. இந்த தேவியைச் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் சிவந்த நிற ஆடை சாத்தி, செம்மலர்க ளால் அர்ச்சித்து வழிபடுவோருக்குச் சகல தோஷங்களையும் போக்கி வெற்றிகள் குவிந்திட அருள்பாலிப்பாள்.

தேவிக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் அன்னையை வழிபட்டால், சகல நன்மைகளையும் அருளி காத்திடுவாள். அன்புடன் தன்னை வழிபடுவோரின் குறைகளைப் போக்கி அவர்களுக்கு நன்மைகளை அருள்கிறாள் இந்த தசபுஜ மாகாளி" என்கிறார்கள்.

Tags:    

Similar News